முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள்
Posted by யுகபாரதி மேல் ஜூலை 17, 2010
செய்யக்கூடாத பாவத்தைச்
செய்ததுபோல் காணப்படுவார்கள்
ஒரு நாளென்பது
ஒரு நாளாக அல்லாமல்
வேலாக அவர்களின் விலாஎலும்பைக்
குத்திக்குடையும்
இஸ்திரி இடப்படாத
அவர்களின் சட்டை சுருக்கங்கள்
அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக்
கொண்டுதரும்
தன் சகாக்களின் முன்பாக
உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத்தயங்கித்
தாமதமாக உண்பார்கள்
சமயத்தில் பட்டினியும் கிடப்பார்கள்
இயல்பான தம் பேச்சுகளை
ஏகடியம் செய்வார்களென்று
வெறுமனே தலையை மட்டும் ஆட்டுவார்கள்
தேர்வைவிடவும்
தேர்வுக்கட்டணத்திற்காக கவலைப்படுவார்கள்
அவர்கள் படிக்க வந்ததை மறந்து
நடிக்கத் தொடங்குவார்கள்
ஆசையிருந்தும்
அழகிய பெண்களை/ஆண்களை
ஆழ்ந்து ரசிக்கத் தயங்குவார்கள்
முடிவாய்ச் சொல்வதெனில்,
முதல் தலைமுறையில்
கல்லூரிக்குள் நுழைபவர்கள்
தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து
அழுதுகொண்டிருப்பார்கள்


Saran சொன்னார்
என் அனுபவத்தை கவிதையாக்கி தந்த நண்பா வாழ்த்துகள்………
கண்ணகி சொன்னார்
அழுத்தமான கவிதை….விகடனிலும் படித்துவிட்டேன்….
ஜெயகர் சொன்னார்
வடுக்கள். இப்போது சிரிக்க மட்டுமே முடிகிறது.
kaka சொன்னார்
/**முதல் தலைமுறையில்
கல்லூரிக்குள் நுழைபவர்கள்
தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து**/
மிக மிக நன்று (உண்மை)
அதிரை அருட்புதல்வன் சொன்னார்
ஆழமான, எதார்த்தமான கவிதை.
மிகவும் ரசித்தேன்..
என் பங்கிற்கு….
“வழக்குச் சொற்களின் உபயோகித்தில்
வருத்தப் படுவார்கள்..
ஆங்கில நாக்குகளுக்கு
அடிமைப் படுவார்கள்..
மொத்தத்தில்,
மூத்த வலிக்காரர்கள்
முதல் பட்டதாரிகள்…”
kabagct சொன்னார்
வலி என்ற சொல்லை
வார்த்தையை மட்டுமல்ல ,
வாழ்கையாகவும் எனக்கு தெரியும் ……… தாமிரா